
கேரள மாநிலம் பாலக்காடு அருகே கல்லடிக்கோடு என்னும் பகுதி அமைந்துள்ளது. இது பாலக்காடு – கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் வந்த காரும் எதிர் திசையில் கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் காரின் முன் பகுதி முற்றிலுமாக சேதமடைந்ததோடு அதில் இருந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர். இந்த விபத்தில் காரில் இருந்த விஜேஸ், ரமேஷ், விஷ்ணு, முஹம்மது அப்சல் மற்றும் மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காருக்குள் சிக்கி இருந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்தில் சிக்கிய வாகனங்களை கிரேன் மூலமாக சாலையிலிருந்து அகற்றி உள்ளனர். இந்நிலையில் கனமழையால் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.