18வது ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி 18 வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக கோப்பையை வென்றது. பெங்களூர் அணி கோப்பையை வென்றது கர்நாடக முழுவதும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த மகிழ்ச்சி தற்போது ஒரு நீங்கா துயரமாக மாறிவிட்டது. அதாவது சின்னச்சாமி மைதானத்தில் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்ததோடு ஏராளமானோர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு மாநில அரசே காரணம் என பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த முதல்வர் விசாரணைக் குழுவை அமைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சின்னச்சாமி மைதானத்தை இடமாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவம் எந்தவிதமான அரசாங்கத்தின் கீழும் நடக்கக்கூடாது. இந்த சம்பவம் என்னையும் என்னுடைய அரசாங்கத்தையும் தனிப்பட்ட முறையில் மிகவும் காயப்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் ஐந்து அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் உளவுத்துறை செயலரும் முதலமைச்சரின் தனி அதிகாரியும் மாற்றப்பட்டுள்ளனர். அதோடு சின்னச்சாமி மைதானத்தை நகரின் மையப்பகுதியில் இருந்து வேறொரு பகுதிக்கு மாற்ற பரிசீலனை நடைபெறுகிறது என்று கூறினார். மேலும் சின்னச்சாமி மைதானத்தை மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளதாக முதல்வர் சித்தராமையா கூறியது பரபரப்பாக பேசப்படுகிறது.