
புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால் அதாவது 30 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண்கள் எடுத்தால் கட்டாயமாக ஃபெயில் செய்யப்படும் நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது. இது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,
திமுக அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது. இதனால்தான் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு எதிர்க்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் மாணவர்களின் இடைநிற்றல் என்பது அதிகரிக்கும். 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தோல்வி அடையும்போது மீண்டும் அதே வகுப்பில் படிக்க வைத்தால் மன அழுத்தம் அதிகமாகும். மீண்டும் அதே நடைமுறை தொடர்ந்தால் அவர்கள் கண்டிப்பாக படிப்பை தொடர மாட்டார்கள்.
அதன்பிறகு சிபிஎஸ்இ பள்ளிகளில் இது தொடர்பாக கையெழுத்து கேட்டால் பெற்றோர்கள் கையெழுத்து போடக்கூடாது. கண்டிப்பாக அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் இடைநிற்றல் என்பது பள்ளிகளில் அதிகரிக்க தொடங்கி விடும். மேலும் பெற்றோர்கள் கேள்வி கேட்காவிடில் புதிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டிய அபாயம் வந்துவிடும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.