மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக அங்கு கலவரம் நடக்கிறது. அதாவது இரு பழங்குடியின சமூக மக்களிடம் ஏற்பட்ட பிரச்சனை பெரும் கலவரமாக மாறியுள்ளது. இந்த கலவரத்தில் பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் கடந்த வருடம் பெண் ஒருவரை உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் சென்ற வீடியோக்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இடையில் கலவரம் சற்று ஓய்ந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கடத்திச் சென்று அவர்களை கொலை செய்ததால் மீண்டும் கலவரம் வெடித்தது. இதற்கிடையில் இந்த வன்முறைக்கு காரணம் மணிப்பூர் முதல்வர் பைரன்சிங் தான் என்றும் அவர்தான் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாகவும் ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக குக்கி சமூகத்தை சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக முதல்வர் பைரன்சிங் விளக்கம் கொடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த 9-ம் தேதி  பைரன் சிங் ஆளுநரை நேரில் சந்தித்து தன்னுடைய முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதோடு மணிப்பூர் மாநிலத்திற்காக இதுவரை செய்த உதவிகளுக்கு அவர் மத்திய அரசுக்கு நன்றி சொல்வதாகவும் கூறியுள்ளார். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையில் ஏராளமானோர் உயிரிழந்த நிலையில் அவர் திடீரென ராஜினாமா செய்துளளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில் அடுத்த மணிப்பூர் முதல்வர் யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்ததோடு கலவரம் அடக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

இந்த நிலையில் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி மணிப்பூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது புதிய முதலமைச்சரை பாஜக தேர்வு செய்யாததால் ஆளுநரின் பரிந்துரையை ஏற்று ஜனாதிபதி ஆட்சி மணிப்பூரில் நடைபெற இருக்கிறது.