காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு பதிலடியாக நேற்று நள்ளிரவு ஆப்ரேஷன் சிந்துர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதலின் போது பயங்கரவாத அமைப்புகள் மட்டுமே குறிவைக்கப்பட்ட நிலையில் 9 இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியான நிலையில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தவில்லை என இந்திய அரசு குறிப்பிட்டு இருந்தது.

இந்நிலையில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பின் மூலம் விளக்கம் கொடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குர்ஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். இது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது, காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியது. எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் நீண்ட காலமாக உதவுகிறது. பயங்கரவாதிகளுக்கு ஒரு பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் இருக்கிறது. பயங்கரவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதில் தாக்குதலை மேற்கொண்டு நம்முடைய உரிமையை நிலைநாட்டி உள்ளது.

தீவிரவாத முகாம்களை குறி வைத்து துல்லியமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலுக்கு காரணமான குற்றவாளிகளை இந்தியா தண்டித்துள்ளது. அதன் பிறகு தொடர்ந்து பேசிய அவர் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் இருக்கிறது. தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் மாறி உள்ளதற்கான ஆதாரமும் இருக்கிறது. பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நேரடி சாட்சிகளிடம் விசாரணை நடத்தி குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

மேலும் தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பை தகர்ப்பதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பி பதில் பெற்றதற்கான ஆதாரம் இருக்கிறது. மேலும் இந்த தாக்குதல் நடந்து  இரு வாரங்களாகியும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.