
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில், தமிழில் மந்திரங்கள் ஒலிக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தொடர்பாக, தமிழக அரசு எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தாக்கல் செய்த மனுவில், “குடமுழுக்கு விழா என்பது தமிழர்களின் ஆன்மீகக் கட்டமைப்பில் மிக முக்கியமானது. ஆனால் விழாவில் பயன்படுத்தப்படும் வேத மந்திரங்கள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் மட்டுமே ஒலிக்கின்றன. அதற்குப் பதிலாக தமிழில் திருப்புகழ், திருமுறை போன்றவை வாசிக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள், தமிழக அரசுக்கு எழுத்துப் பூர்வ விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதே நேரத்தில், “யாகசாலைகளில் நடைபெறும் முக்கிய ஆன்மீக செயல்களில் திருப்புகழ், திருமுறை பாடல்களே தமிழில் பாடப்படுகின்றன” என அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதையும் குறிப்பிடலாம்.
இவ்வாறு தமிழில் மந்திர ஒலியுடன் குடமுழுக்கு நிகழ்வை நடத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கு, தமிழ்நாட்டு ஆன்மீக மரபுகளை மொழி அடிப்படையில் பராமரிக்க வேண்டிய தேவை குறித்து புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கின் முடிவு எப்படியிருக்கும் என்பதற்கான எதிர்பார்ப்பு, தமிழகம் முழுவதும் ஆன்மீக வட்டாரங்களில் உருவாகி வருகிறது.