
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு இரண்டாம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் (38) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து நடத்தி வரும் நிலையில் தினசரி கடை முடிந்த பிறகு அடர்ந்த காட்டுப்பகுதியில் சென்று அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை மிரட்டி வீடியோ எடுத்து மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவார்.
இவர் மீது ஏற்கனவே இது போன்ற வழக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பதிவான நிலையில் 15-க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளும் பதிவாகியுள்ளது. இவர் காவல்துறையினிடமிருந்து தப்பி ஓட முயன்ற போது இடது கை மற்றும் இடது காலில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இவர் கைது செய்யப்பட்ட மாஜிஸ்திரேட் வீட்டில் நேற்று இரவு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விடுத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை வழங்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.