தமிழக சட்டப்பேரவையின் 2026-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தொடங்கியது. இருப்பினும், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் பாதியிலேயே வெளியேறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தைத் தொடங்க அரசு முறைப்படி அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை, சபாநாயகர் மு.அப்பாவு மலர்க்கொத்து வழங்கியும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் வரலாறு குறித்த புத்தகத்தைப் பரிசளித்தும் வரவேற்றார்.

கூட்டம் தொடங்கியதும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. மரபுப்படி ஆளுநர் தனது உரையை வாசிக்கத் தொடங்க வேண்டும். ஆனால், உரையை வாசிக்க மறுத்த ஆளுநர், தேசிய கீதம் விவகாரத்தைக் காரணம்காட்டி அவையிலிருந்து வெளியேறினார்.

அவை நிகழ்வுகளின் தொடக்கத்திலேயே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தனது கோரிக்கை ஏற்கப்படாததால், உரையை வாசிக்க விரும்பவில்லை எனக் கூறி அவர் வெளியேறினார். ஆளுநர் ஆர்.என்.ரவி இவ்வாறு உரையை வாசிக்காமல் புறக்கணிப்பது இது நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிலையில் அதற்கான காரணத்தை விளக்கியுள்ளார். மேலும் ஆளுநர் பேசும் போது மைக் பலமுறை ஆப் செய்யப்பட்டதாகவும் தன்னை தமிழக அரசு வேண்டும் என்றே அவமதித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசின் மீது கிட்டத்தட்ட 13 குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர் அறிக்கை வெளியிட்டுள்ளது தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.