மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் விளையாட்டு வளாகம் உள்ளது. இங்கு அரசு சார்பில் ஒப்பந்த தொழிலாளராக ஹர்ஷ் குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை பார்க்கிறார். மாதம் 13,000 ரூபாய் சம்பளமாக வாங்குகிறார். திடீரென ஹர்ஷ் குமார் பிஎம்டபிள்யூ காரில் வலம் வந்தது சக ஊழியர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும் ஹர்ஷ் குமார் தனது காதலிக்கு 4 படுக்கையறை கொண்ட வீட்டை பரிசாக கொடுத்துள்ளார். திடீரென இவருக்கு பணம் எப்படி வந்தது என அனைவரும் யோசிக்க ஆரம்பித்தனர். பிஎம்டபிள்யூ கார், பைக், விமான நிலையத்திற்கு எதிரே அடுக்குமாடி குடியிருப்பு, வைரங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடி என அவரது வசதி அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் சந்தேகமடைந்த சக பணியாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சக பணியாளருடன் இணைந்து ஹர்ஷ் குமார் 21 கோடி ரூபாய் அரசு நிதியை மோசடி செய்தது உறுதியானது. அந்த பணத்தை பயன்படுத்தி தான் ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். விளையாட்டு வளாகம் பெயரில் வங்கி கணக்கை தொடங்கி போல ஆவணங்களை பயன்படுத்திz துணை இயக்குனரின் கையெழுத்துகளை போட்டு மோசடி செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.