பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மோதல் இப்போது ஒரு முழு அளவிலான போராக மாறியுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அதிரடி வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் சுமார் 331-க்கும் மேற்பட்ட தாலிபான் வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் உள்ள ராணுவ முகாம்கள் மற்றும் பீரங்கிகளைப் பாகிஸ்தான் தரைமட்டமாக்கியுள்ளது. இதற்குப் பதிலடியாக, ஜலாலாபாத் பகுதியில் பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றைச் சுட்டு வீழ்த்தி அதன் விமானியைச் சிறைபிடித்துள்ளதாகத் தாலிபான்கள் தரப்பில் அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், பாகிஸ்தான் இந்தத் தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளது. எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளதால் பெஷாவர் மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தாலிபான் தனது கொரில்லா மனநிலையை விடாவிட்டால் போரில் வெற்றி பெறுவது உறுதி எனப் பாகிஸ்தான் அமைச்சர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மறுபுறம், வளைகுடா நாடுகளில் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) என்ற பெயரில் பயங்கரத் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அதிபர் மாளிகை மற்றும் உச்ச தலைவர் கமேனியின் இருப்பிடங்களுக்கு அருகே ஏழு ஏவுகணைகள் தாக்கியுள்ளன.

அமெரிக்கா நேரடியாகப் போரில் இறங்கியுள்ளதை அதிபர் டிரம்ப் உறுதி செய்துள்ளார். இதற்குப் பதிலடியாக ஈரான் நடத்திய தாக்குதலில் துபாய், அபுதாபி மற்றும் ரியாத் ஆகிய நகரங்களில் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளதால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இந்தப் போரை நிறுத்த ஐநா சபை மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றன.