தஞ்சாவூரில் உள்ள தஞ்சை பெரிய கோவிலில் 11 காணிக்கை உண்டியல்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொரு மாதமும் திறந்து இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் எண்ணுவது வழக்கம். அதன்படி இந்த மாதம் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள், கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் சிலர் ஈடுபட்டனர்.

அப்போது அந்தப் பணியில் ஈடுபட்ட பெண் ஒருவர் யாரும் கவனிக்காத நேரம் ரூபாய் நோட்டுக்களை ஒவ்வொன்றாக தனது மடியில் ஒளித்து வைத்து உள்ளார். பின்னர் அதனை எண்ணிப் பார்ப்பதற்காக மறைவான இடத்தை நோக்கி வேகமாக சென்ற போது மடியில் இருந்து சில ரூபாய் நோட்டுகள் கீழே சிதறி விழுந்துள்ளது.

இதனைக் கண்ட கோவில் ஊழியர் வீரமணி அப்பெண்ணை மடக்கிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து தஞ்சை அரண்மனை தேவஸ்தான செயல் அலுவலர் சத்யராஜ் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பணத்தை திருடிக் கொண்டு சென்ற பெண் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த இந்திரா (60) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் உண்டியலில் உள்ள ரூபாய் 25,780 ஐ திருடி உள்ளார் என்பதும் தெரியவந்தது.  அவர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் தன்னார்வலராக முதல் முறையாக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.