உத்திரபிரதேச மாநிலம் வலித்பூரில் மாவட்ட பெண்கள் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த 9ம் தேதி அன்று சங்கீதா என்ற பெண் பிரசவ வலியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றே அவருக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. குறைப்பிரசவத்தில் இந்த குழந்தை பிறந்துள்ளதால் அதற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டது. இதைத் தொடர்ந்து குழந்தைகள் சிறப்பு சிகிச்சை பிரிவில் வைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பிறந்த 45 நிமிடங்களிலே உயிரிழந்தது.

இதைத்தொடர்ந்து பெற்றோரிடம் குழந்தையின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் குப்பைத்தொட்டியில் ஒரு குழந்தையின் உடல் கிடப்பதாக கடந்த 11ஆம் தேதி மருத்துவமனை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த சிசுவின் உடலை சில தெரு நாய்கள் கடித்துள்ளது. இதையடுத்து அந்த சிசுவின் உடலை மீட்ட ஊழியர்கள், பரிசோதனை செய்ததில் சங்கீதா பெற்றெடுத்த குழந்தை தான் என்று உறுதி செய்யப்பட்டது.

இதற்கு முன்னதாக குழந்தையின் உடலை பெற்ற சங்கீதாவின் கணவர் அகிலேஷிடம், மருத்துவமனையில் சேவை செய்யும் செவிலியர் ஒருவர் குழந்தையின் உடலை எரிக்க 200 ரூபாய் செலுத்தினால் போதும். அதற்காக ஆள் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி அவரும் குழந்தையின் உடலை கொடுத்து எரிப்பதற்கான பணத்தையும் கொடுத்துள்ளார். இந்த உடலை எடுத்துச் சென்ற அந்த நபர், அதை அனாதை பிணமாக வீசி சென்றுள்ளார். அதனை நாய்கள் சில கடித்துத் தின்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.