
பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரபீக் மற்றும் சாஹீர் உட்பட ஐந்து பேர் மீது மதுபோதையில் சிறுவர்களை தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், மனோவின் மனைவி ஜமிலா முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார்.
ஜமிலா கூறுகையில், “எங்கள் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. எனது மகன்கள் தலைமறைவாக இல்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தவறான தகவல்கள் பரப்பப்படுவதால் அவர்கள் அவமானத்தில் வெளியே சென்று இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “எங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் என இருந்தேன். ஆனால், தற்போது இந்த சம்பவம் பெரிதாகிவிட்டது” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜமிலா, “எங்கள் குடும்பம் கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறது. இந்த சம்பவத்தால் எங்கள் குடும்பம் அவமானப்பட்டுள்ளது. எனவே, தேவையற்ற அவதூறுகளை பரப்ப வேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.