அசாம் – அருணாச்சல எல்லைக்கு அருகே உள்ள ஒரு சுற்றுலா பகுதிக்கு கடந்த வார இறுதியில் குடும்பத்துடன் வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் பீதியில் ஓடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. காட்டில் இருந்து திடீரென ஒரு காட்டு யானை வெளியே வந்து பயணிகள் இருக்கும் இடத்தில் நுழைந்ததால், அவர்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்ற ஓடத் தொடங்கினர்.

 

யானையைப் பார்த்தவுடன் அருகிலிருந்த வாகனங்களும் தங்களது பாதையை மாற்றி நகர்ந்தன. இந்த சம்பவத்தின் வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி பரவீன் கஸ்வான் தனது X கணக்கில் பகிர்ந்துள்ளார். “அழகான இடங்களை தேடி, தயவுசெய்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாதீர்கள்” என்ற எச்சரிக்கையுடன் அவர் பதிவிட்ட அந்த வீடியோ தற்போது 60,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.

வீடியோவில், மக்கள் கூட்டம், யானையின் ஓட்டம், பீதியுடன் ஓடும் பயணிகள் ஆகியவை தெளிவாக தெரிகின்றன. மகிழ்ச்சி தரவேண்டிய சுற்றுலா பயணம் பரபரப்பாக முடிந்தது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. “யானைகள் வழக்கமாக நடமாடும் இடத்தில் சுற்றுலா நடத்துவது சரியா?”, “இது யானையின் குடியிருப்பு… மனிதர்கள் வரக்கூடாத இடம்”, “இது போன்ற இடங்களுக்கு அரசு அனுமதி அளிக்கக்கூடாது” என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்.

வனத்துறை இவ்வாறு ஆபத்தான பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம், இயற்கையை அனுபவிக்க போவது நியாயமானதுதான், ஆனால் விலங்குகளின் வாழ்விடத்துக்குள் நுழைவது எப்போதும் ஆபத்தே என்பதையும் நினைவுபடுத்துகிறது.