
இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் நேற்று மதியம் 1:38 மணி அளவில் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற “ஏர் இந்தியா” நிறுவனத்தின் பயணிகள் விமானம் மேலே பறந்த சில நிமிடங்களில் வெடித்து சிதறியது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பேரில் 204 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் விமானம் விழுந்த பகுதியில் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தங்கும் விடுதி இருந்துள்ள நிலையில், அங்கு இருந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தக் கோர விபத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பத்தனம்திட்டா மாவட்ட கோடஞ்சேரி பகுதியை சேர்ந்த செவிலியர் ரஞ்சிதா நாயர் (40) சிக்கி உயிரிழந்து உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அவரது கணவர் விக்னேஷ், அவருக்கு பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகள் ரித்திகா, இந்துசூடன் மற்றும் அவரது தாய் துளசி ஆகியோர் உள்ளனர். இவர் ஓமனின் சலாலாவில் 8 ஆண்டுகள் செவிலியர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.
பின்னர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த பின் இங்கிலாந்தில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே கேரளாவில் உள்ள வீடு கட்டுமான வேலைகளை பார்வையிட இங்கிலாந்தில் இருந்து கேரளாவிற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் பணியின் காரணமாக இங்கிலாந்து செல்வதற்காக ஏர் இந்தியா நிறுவனத்தின் “போயிங் 787-8 ட்ரீம் லைனர்” பயணிகள் விமானத்தில் மீண்டும் பயணம் செய்துள்ளார்.
மேலும் ரஞ்சிதா இங்கிலாந்து வேலைக்கான ஒப்பந்தத்தை முடித்துவிட்டு கேரளாவில் மாநில சுகாதார சேவையில் பணிபுரிய திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.