அ.தி.மு.க-வின் ஒற்றை தலைமையாக உருவெடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ் போன்றோரை சேர்த்துக்கொள்ளும் முடிவில் இல்லை. அவர்கள் கட்சிக்குள் மீண்டும் வந்தால் குழப்பம் அதிகரிக்கும், தனக்கான செல்வாக்கு குறைந்து விடும் என கணக்கு போட்டிருக்கும் அவர், மீண்டும் அவர்களை இணைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் உறுதியாக உள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரின் மகனுக்கு நிச்சயம் நடந்தது. இந்த நிகழ்வில் சசிகலா, இளவரசி, திவாகரன் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்றனர். அதன்பின் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக இணைப்பு பற்றி பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதிமுகவின் பிரிவு திமுகவுக்கு வெற்றியை கொடுக்க நான் கண்டிப்பாக விடமாட்டேன். அனைவரையும் ஒன்றிணைக்க நான் தொடர்ந்து முயற்சித்து வருகிறேன். இந்த இணைப்புக்கு பின் அனைவரும் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம். கூடியவிரைவில் ஓ.பன்னீர்செல்வம் வந்து என்னை சந்திப்பார். எங்களது கட்சிக்காரர்களிடையே நாங்கள் வித்தியாசம் பார்ப்பதில்லை என சசிகலா தெரிவித்தார்.