
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வீரவநல்லூர் காவல் நிலையத்தில் சுப்பையா என்பவர் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 21. 10. 24 அன்று பணி முடிந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைகிறேன் என்று முதலமைச்சர் மு. க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இவரின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும், அவரது குடும்பத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அதோடு காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவை இழந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றும் காவல்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியிருந்தார்.
அதோடு சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண் VYJ 1399 மகாகவி பாரதி நகரில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில் நடத்துனராக ஜெகன் குமார் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஒரு பயணியுடன் ஏற்பட்ட வாய் தகராறின் போது அந்தப் பயணி தாக்கியதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்து விட்டார்.
இந்த துயரமான செய்தியையும் கேட்டறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன் இந்நிலையில் உயிரிழந்த அரசு மாநகர பேருந்து நடத்துனர் ஜெகன் குமாரின் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றும் பணியாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.