
மத்திய அரசு, வீட்டுகள், ஹோட்டல்கள் மற்றும் கார்களில் பயன்படுத்தப்படும் ஏசிகள் (AC) வெப்பநிலையை 20 டிகிரி செல்சியஸ்க்கு கீழ் வைக்கக்கூடாது என்ற புதிய விதிமுறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் மூலம், கோடையில் அதிகரிக்கும் மின் நுகர்வை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதாக மின் மற்றும் பசுமை ஆற்றல் மந்திரி மனோஹர் லால் கட்டார் தெரிவித்தார்.
இந்தியாவில் ஏசிகள் மூலம் ஆண்டுதோறும் சுமார் 50 கிகாவாட் மின் சக்தி பயன்படுகிறது. இது நாட்டின் மொத்த உச்ச மின் தேவையின் 20% ஆகும். மின்துறை உயரதிகாரி பங்கஜ் அகர்வால் தெரிவித்ததாவது, “ஏசி வெப்பநிலையை ஒரு டிகிரி அதிகரித்தாலே 6% மின்சாரம் சேமிக்க முடியும். இதனால் பீக் நேரத்தில் மட்டும் 3 கிகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும்” என்றார்.
இந்தியாவில் தற்போது 100 மில்லியன் ஏசிகள் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், ஆண்டுக்கு 15 மில்லியன் புதிய ஏசிகள் பொருத்தப்படுகின்றன. இந்த நிலையில் வெப்பநிலை கட்டுப்பாடு மிகப்பெரிய மின்சார சேமிப்பை ஏற்படுத்தும். 2035-க்குள் 60 கிகாவாட் மின்சார தேவை குறையும்.
இதனால் ₹7.5 லட்சம் கோடி செலவில் புதிய மின் நிலையங்கள் கட்ட வேண்டிய அவசியம் நீங்கும் என Berkey பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், மத்திய அரசு பசுமை ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் 30 கிகாவாட் மணி சேமிப்பு திறனுடைய பாட்டரி திட்டங்களை தொடங்க உள்ளதாகவும், இதற்காக ₹5,400 கோடி மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கட்டார் அறிவித்துள்ளார்.
மூன்று மாதங்களில் டெண்டர் அழைப்புகள் விடப்படும் என்றும் கூறினார். இந்த திட்டம் வெப்ப அலைகளால் ஏற்படும் மின் தட்டுப்பாடுகளை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் மின் கட்டமைப்பில் அழுத்தத்தை குறைக்க உதவும் என அரசு நம்புகிறது.