
மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் அருகே இந்தூர்-இச்சாபூர் ஹைவேவில், 17 வயதுடைய மனைவி தனது காதலனுடன் இணைந்து தனது கணவர் ராகுல் அலியாஸ் கோல்டனை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 13 அன்று இந்த கொலை சம்பவம் நடந்தது. ITI கல்லூரி அருகே மனைவி தனது புடவை கழன்றுவிட்டதாகக் கூறி ராகுலிடம் வண்டியை நிறுத்தச் சொல்கிறார். அதே நேரத்தில், பின்தொடர்ந்த வந்த காதலன் மற்றும் அவரது நண்பர்கள் ராகுலை தாக்கியுள்ளனர்.
கொலையின்போது ராகுலை, மனைவி பியர் பாட்டிலால் தாக்கியதும், பிறகு குழிக்குள் தள்ளியதும் போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர். பின்னர் கூர்மையான ஆயுதத்தால் கழுத்து, முதுகு, வயிறு மற்றும் தலை போன்ற பகுதிகளில் 36 முறை குத்தி ராகுல் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ராகுலின் மனைவி அவரது காதலன் பாரத் அலியாஸ் யுவராஜுக்கு வீடியோ கால் செய்து “வேலை முடிஞ்சுச்சு” எனக் கூறியதாக தெரியவந்துள்ளது. பின்னர் நால்வரும் இரயிலில் இந்தூருக்கு தப்பிச் சென்றுள்ளனர். போலீசார், மொபைல் லொக்கேஷன் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் இந்தூர் அருகே சான்வேரில் இருந்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
அனைவரும் விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். போலீசாரின் நேர்மையான விசாரணை மூலம் குற்றவாளிகள் விரைவில் பிடிபட்டனர். இது ஒரு திட்டமிட்ட கொலை என போலீசார் உறுதி செய்துள்ளனர். ராகுலும் அவரது மனைவியும் ஏற்கனவே சந்தேகத்துக்கிடமான உறவில் இருந்தனர் என்றும், திருமணத்திற்கு முன்னரே மனைவி யுவராஜுடன் காதலித்துவந்ததாகவும் தெரியவந்துள்ளது.
திருமணத்துக்குப்பிறகும் அவர்கள் தொடர்பில் இருந்துள்ளனர். தற்போது நால்வருக்கும் கொலை மற்றும் குற்றச்செயல் சதி குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.