தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் தனியார் தங்கும் விடுதியில் தாய்- மகள் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரம் முடக்குளத்தை சேர்ந்தவர் மோகன் நாயர். இவருக்கு அம்பிகா (67) என்ற மனைவி இருந்துள்ளார்.

மேலும் இவர்களுக்கு மாலினி (40) என்ற மகளும் இருந்துள்ளார். இந்நிலையில் மாலினி தனது கணவருடன் ஏற்பட்ட சண்டையால் தாய் வீட்டில் தங்கி வந்துள்ளார். அதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த தாய், மகள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்து  பூச்சி மருந்தை வாங்கிக் கொண்டு திருச்செந்தூருக்கு நேற்றிரவு வந்துள்ளனர்.

பின்னர் ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அங்கு குளிர்பானத்தில் பூச்சி மருந்தை கலந்து இருவரும் குடித்துள்ளனர். அதனால் இருவருக்கும் வாந்தி வந்துள்ளது. உடனே பயந்து போன இருவரும் இது குறித்து விடுதி ஊழியரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து விடுதி ஊழியர்கள் இருவரையும் உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாய், மகள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.