
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஆறுமுகசுவாமி கோவில் தெருவில் அரசு தலைமை மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜூன் 11ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மருத்துவமனையின் வளாகத்தில் உள்ள முட்புதரில் குழந்தை ஒன்று அழுவது போல சத்தம் கேட்டுள்ளது.
அச்சத்தத்தை கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த இளங்கோ (50) என்ற நபர் அந்த முட்புதர் அருகே சென்று பார்த்துள்ளார். அங்கு பார்த்தபோது பிறந்து சில மணி நேரங்களிலே பச்சிளம் பெண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியோடு துணியில் சுற்றி வீசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு இளங்கோ கொண்டு சென்றார். அங்கு குழந்தைக்கு இன்குபேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து திருத்தணி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து வருகின்றனர். பிறந்த குழந்தையை இரக்கமில்லாமல் முட்புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.