
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள பகுதியில் ஸ்ரீ குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது எதிரே சிறுத்தை ஒன்று ஆக்ரோஷமாக நடந்து வந்துள்ளது. இதனை பார்த்த அவர் அலறியடித்து ஓடினார்.
சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கூச்சலிட்டதை அடுத்து சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியது. இந்நிலையில் நேற்று பிரபா என்பவர் வீட்டின் கதவை திறந்த போது சிறுத்தை வாசலில் நின்றுள்ளது. இதனால் அவர் உடனே கதவை அடைத்து விட்டார். பின்னர் சிறுத்தை அங்கிருந்து சென்றது.
இது தொடர்பாக வன அலுவலர் உத்தரவின்படி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோன்று எருமாடு அருகே சந்தோஷ் என்பவரது வீட்டிற்குள் சிறுத்தை நுழைய முயன்றது. அப்போது அங்கு நுழைவாயில் நின்று கொண்டிருந்த வளர்ப்பு நாய் ஒன்று சிறுத்தையை பார்த்து குரைத்தது.
இதையடுத்து சிறுத்தை அங்கிருந்து ஓடியது. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.