கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள  சரவணம்பட்டி அருகே உள்ள சங்கரா கல்லூரி சாலையில் வசித்து வந்த சத்தியபிரபு என்பவரின் மகன் சஞ்சீவ் (8). கடந்த மே 29-ஆம் தேதி இரவு தூக்கத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் இயங்கும் ஒரு தனியார் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்த சஞ்சீவ், தனது பெற்றோருடன் பிரியாணி சாப்பிட்ட பிறகு தூங்க சென்ற நிலையில், மறுநாள் காலையில் எழாமல் இருப்பதை பெற்றோர் கவனித்தனர்.

தொடர்ந்து சஞ்சீவ்வை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். ஆனால், மருத்தவர்கள் சிகிச்சைக்கு வரும்போதே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சஞ்சீவ் சாப்பிட்ட உணவானது தரமற்றதா அல்லது வேறு காரணமா என்பதை உறுதி செய்ய விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியபிரபு அவரது குடும்பத்திற்கு பிரியாணி பார்சலை, சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரி அருகிலுள்ள ஒரு தனியார் உணவகத்தில் வாங்கியதாக தெரிய வந்துள்ளது.

அதன்பிறகு அந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது என்பதால், அந்த உணவகத்தின் உணவுப் பொருட்களின் தரம், கையாளும் முறைகள், உணவுக்கழிவுகள் உள்ளிட்டவை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் மத்தியில் உணவகங்களின் பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த கவலை அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பவம் உணவகத்துறை மீது கண்காணிப்பை அதிகரிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.