
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், செம்புலிவரம் மேடு பகுதியில் பவானி (35) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ஏலச்சீட்டு நடத்துவாராம். கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்டோர் இவரிடம் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் பாபு என்ற நபர் பவானியிடம் ரூ. 3 லட்சம் ஏலச்சீட்டு கட்டி வந்தார். இவருக்கு தவணைக்காலம் முடிந்தும் கட்டிய பணத்தை பவானி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் பாபு காவல் நிலையத்தில் பவானி மீது புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியதில் பவானி சுமார் ரூ.78 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து தலைமறைவான பவானியை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.