உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு வெளியே, நோய்வாய்ப்பட்ட தனது குழந்தைக்கு ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவிகளுடன் அமர்ந்திருக்கும் தம்பதியரின் பதற வைக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் நிலவும் படுக்கை மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டும் இந்த விவகாரம் இணையத்தில் அனல் பறக்கும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

ஒரு  பயனரால் பகிரப்பட்ட இந்தத் துயரமான காணொளி, ஆன்லைன் பயனர்களிடையே கடுமையான கோபத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. அந்த வைரல் காட்சியில், அரசு மருத்துவமனைக்கு வெளியே உள்ள நடைபாதையில் ஒரு தம்பதியர் அமர்ந்துள்ளனர். தந்தை தனது மடியில் உடல்நிலை சரியில்லாத குழந்தையைத் தாங்கியுள்ளார்; அந்தக் குழந்தைக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் மற்றும் பல மருத்துவக் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளதை அந்த வீடியோ காட்டுகிறது. அருகில் குழந்தையின் தாயார் செய்வதறியாது அழுதுகொண்டு, அங்கிருந்து செல்வோரிடம் உதவி கேட்பது போன்ற காட்சியும் காண்போரின் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது.

இந்தச் சம்பவம் குறித்த மருத்துவமனையின் உண்மையான பின்னணி மற்றும் குழந்தையின் தற்போதைய மருத்துவ நிலை என்ன என்பது குறித்த முழுமையான விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை என்றாலும், இந்தியாவின் பொது சுகாதாரத்துறையின் தற்போதைய நிலை குறித்து நெட்டிசன்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

 

இந்தச் சோகக் காட்சியைப் பார்த்த பல சமூக வலைதள பயனர்கள், கொடூரமான கோவிட்-19 பெருந்தொற்று காலக்கட்டத்தை நினைவு கூர்ந்துள்ளனர். அந்தச் சமயத்தில் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் இன்றி மக்கள் பட்ட துயரங்களைச் சுட்டிக்காட்டித் தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

பயனாளர் ஒருவர், “இந்தியாவில் போதுமான மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள்” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார். மற்றொருவர், “கோவிட் காலத்தை நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே! அந்தக்காலம் நமது நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பை எப்படி முடக்கியது, எவ்வளவு பெரிய இடைவெளிகள் இருக்கின்றன என்பதை அது காட்டியது. ஆனால் அரசோ வேறு விஷயங்களில் பிஸியாக இருக்கிறது, அவர்களுக்கு நம்மைப் பற்றி கவலை இல்லை” என்று ஆவேசமாகப் பதிவிட்டார்.

மற்றொருவரோ, “பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே முறையான மருத்துவம் கிடைக்கிறது. மற்றவர்களோ தங்களது கடைசி மூச்சு வரை காத்திருக்க வேண்டியதுதான்” என்று மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். அரசு மருத்துவமனைகளை முழுமையாக நம்பி வாழும் ஏழை எளிய மக்களுக்குத் தடையற்ற மற்றும் கண்ணியமான மருத்துவச் சிகிச்சை கிடைக்கிறதா? என்ற மிக முக்கியமான விவாதத்தை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை தேசிய அளவில் வெடிக்கச் செய்துள்ளது.