ஆந்திரப் பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டம், வேமுரு மண்டலத்துக்குள்பட்ட வெல்லபாடு கிராமத்தில், சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி தர மறுத்ததால் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 11 மணியளவில், சாலையில் சென்று கொண்டிருந்த சி.எச். சரண் தேஜாவிடம் 46 வயதான ஈபுரு யோஹான் எதிர்கொண்டதாகவும், அவரிடம் சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் யோஹான் தீப்பெட்டி தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தீப்பெட்டி தர மறுத்த விவகாரம் சிறிது நேரத்தில் முற்றி, இருவரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. சாலையில் ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர். இதையடுத்து இருவரும் தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் சென்றதாகத் தெரிகிறது. இதனால் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாக அங்கிருந்தவர்கள் நினைத்த நிலையில், சிறிது நேரத்தில் சரண் தேஜா மீண்டும் வீட்டிலிருந்து கத்தியுடன் வெளியே வந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்பின்னர் யோஹானை கத்தியால் தாக்கியதாக சரண் தேஜா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கத்திக்குத்தில் பலத்த காயமடைந்த யோஹான் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக தெனாலியில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சரண் தேஜாவை கைது செய்ய காவல் துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த யோஹான் மனைவி மற்றும் மகனை விட்டுச் சென்றுள்ளார். அவரது மனைவி பிறவியிலேயே காது கேளாமலும் பேச முடியாத நிலையிலும் இருப்பதாகவும், அவரது மகன் சிறு வயது முதலே உடல்நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஒரு சிறிய தீப்பெட்டி விவகாரம் வாக்குவாதமாகி, பின்னர் கத்திக்குத்து கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
