உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹமீர்பூர் மாவட்டம் ரத் பகுதியில் அமைந்துள்ள சிக்கந்தர்பூர் சுற்றுவட்டாரத்தில் வசித்து வரும் சந்தோஷ் குமார் என்பவரது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவில் வீட்டின் உள்ளே நின்றுகொண்டிருந்த அந்த வாகனத்தின் பேட்டரி எதிர்பாராதவிதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்ததுடன், உடனடியாகத் தீப்பற்றிக் கொண்டது.

இந்த விபத்தின் காரணமாகப் பற்றிய தீ, அருகில் நின்றுகொண்டிருந்த மற்றொரு பைக்கிற்கும் மற்றும் வீட்டிற்குள் இருந்த விலைமதிப்பற்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் மளமளவென்று பரவியுள்ளது. நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட இந்த விபத்தால் வீட்டின் உள்ளே இருந்த குடும்பத்தினர் அனைவரும் கடும் பீதியடைந்து அலறி அடித்து வெளியே ஓடி வந்துள்ளனர். உடனே அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்து வாசிகளின் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், இந்த விபத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டரும் பைக்கும் முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளன.இதன் காரணமாக ஏறக்குறைய இரண்டு லட்சம் ரூபாய் அளவிற்குப் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட நபர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தீ விபத்திற்கான உண்மையான காரணம் குறித்துப் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன