தெலுங்கானா மாநிலம்,  பத்ராத்ரி  மண்டலத்தில் ஒரே பெண்ணுடன் ஏற்பட்ட தகாத உறவு காரணமாக நிகழ்ந்த கோரக் கொலை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகுடெமில் கிராமத்தைச் சேர்ந்த மௌலானா (42) மற்றும் இஷமாயில் ஆகிய இருவரும் ஒரே பெண்ணுடன் ரகசியத் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, அந்தப் பெண் தமக்குத்தான் சொந்தம் என்று கூறி இருவருக்கும் இடையே அடிக்கடி கடும் வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதியன்று இவர்களின் தகராறு உச்சகட்டத்தை எட்டியபோது, ஆத்திரமடைந்த இஸ்மாயில் தான் ஓட்டி வந்த காரால் மௌலானாவை மிக வேகமாக மோதித் தள்ளியுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த மௌலானாவை அவரது குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்த நிலையில், அங்கு தீவிர சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், ஏற்கனவே ரவுடிஷீட் மற்றும் பல வழக்குகளில் தொடர்புடைய இஸ்மாயிலை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மௌலானா உயிரிழந்த செய்தி கிராமத்தில் காட்டுத் தீ போல பரவியதைத் தொடர்ந்து அங்கு கடுமையான உச்சிதமான சூழலும் பதற்றமும் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மௌலானாவின் உறவினர்களும் கிராம மக்களும் இஸ்மாயிலின் வீட்டிற்குள் புகுந்து அடித்து நொறுக்கியதுடன், அதற்குத் தீயும் மூட்டினர். மேலும் மௌலானாவின் உடலை குற்றவாளியின் வீட்டு வாசலில் வைத்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் இருக்க அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு தீவிர பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.