வாழ்க்கை என்பது நாம் நினைப்பது போல அத்தனை திட்டமிடல்களுக்கு உட்பட்டது அல்ல. அது ஒரு நொடியில், ஒரே ஒரு கணத்தில் தன் கொடூர முகத்தைக் காட்டி அத்தனை கனவுகளையும் தரைமட்டமாக்கிவிடும் என்பதற்கு சூரத் நகரில் நடந்த இந்தச் சோகச் சம்பவம் ஒரு சாட்சியாக மாறியிருக்கிறது.

ஆகஸ்ட் 25, செவ்வாய்க்கிழமை மதியம்… சூரத்தின் நான்புரா பகுதியில் உள்ள ரிவர் பார்க் அபார்ட்மெண்ட்ஸில் வசித்து வந்த 56 வயதான முகமது அமீன் உஸ்மான் கனி ஷேக், வழக்கம் போலத் தன் குடும்பத்தினரிடம் சொல்லிவிட்டுத் தன் மொபெட்டில் கடைக்குப் புறப்பட்டார். அந்தப் பயணம் தன் வாழ்க்கையின் கடைசிப் பயணமாக மாறும் என்று அந்த மனிதர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

ரங்குபவன் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடத்திற்கு அருகே, ஒரு வெள்ளைக் கார் வந்து சாலையோரத்தில் திடீரென நின்றது. காரில் இருந்தவர்கள் 21 வினாடிகள் அமைதியாக உள்ளேயே அமர்ந்திருந்தனர்.

அதே நேரத்தில், தன் மொபெட்டில் அமைதியாக அவ்வழியாக வந்துகொண்டிருந்தார் முகமது அமீன். ஆனால், காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அந்தப் பெண், பின்னால் ஏதேனும் வாகனம் வருகிறதா என்று சற்றும் திரும்பிப் பார்க்காமல், திடீரெனக் காரின் கதவை உள்ளிருந்து பலமாகத் திறந்தார்!

அடுத்த நொடி… ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு அசுரச் சத்தம்! அதிவேகமாக வந்த மொபெட், திடீரெனத் திறக்கப்பட்ட காரின் இரும்புக் கதவின் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் முகமது அமீன் தூக்கி வீசப்பட்டுச் சாலையில் கொடூரமான முறையில் விழுந்தார். அவரது தலையிலிருந்து ரத்தம் சொட்டுச் சொட்டாகச் சாலையில் வழிந்தோடத் தொடங்கியது.

சம்பவம் நடந்த 10 வினாடிகளுக்குப் பிறகு, காரின் ஓட்டுநர் இருக்கையிலிருந்த நபரும், கதவைத் திறந்த அந்தப் பெண்ணும் கீழே இறங்கி வந்தனர். சாலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த 56 வயது முதியவரை அவர்கள் பார்த்தனர்.

ஆனால், மனிதாபிமானத்தின் கசப்பான பக்கமாக, அந்த இருவரும் அந்த மனிதரின் நிலையைப் பார்த்துவிட்டு, மீண்டும் தங்களின் காருக்குள் சென்று அமர்ந்து கொண்டனர்!

அருகிலிருந்த கடைக்காரர்களும், வழிப்போக்கர்களும் ஓடிவந்து முகமது அமீனைத் தூக்கிச் சாலையோரம் நகர்த்தி, 108 ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். உயிருக்குப் போராடிய அந்த நடுத்தர வயது மனிதர் உடனடியாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முகமது அமீன், தன் உயீரைக் காப்பாற்றிக் கொள்ள கடந்த 4 நாட்களாக நரக வேதனையை அனுபவித்துப் போராடினார்.

ஆனால், மருத்துவர்களின் தீவிர முயற்சி பலனளிக்காமல், காயங்களின் வீரியம் தாங்க முடியாமல்  காலை (ஆகஸ்ட் 29) அவரது உயிர் பிரிந்தது. தன் குடும்பத்தின் தூணாக இருந்த தந்தை இனி திரும்பவே மாட்டார் என்பதை அறிந்த அவரது குடும்பத்தினர், கதறித் துடிக்கும் காட்சி பார்ப்போரின் நெஞ்சைப் பிளப்பதாக உள்ளது.

“>

இந்த விவகாரத்தில், பின்னால் பார்க்காமல் கதவைத் திறந்து ஒரு மனிதனின் உயிரைப் பறிக்கக் காரணமான கார் பயணி மற்றும் ஓட்டுநர் மீது காவலத்துறை வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டுக் கதவைத் திறப்பது என்பது நமக்கு ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றலாம். ஆனால், திரும்பிப் பார்க்காமல் நாம் திறக்கும் அந்த ஒரே ஒரு இன்ச் கதவு, பின்னாலிருந்து வரும் ஒரு மனிதனின் வாழ்வையே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும் என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

சாலையில் பயணிக்கும் போது நாம் காட்டும் சிறு கவனக்குறைவு, இன்னொரு குடும்பத்தின் வெளிச்சத்தையே அணைத்துவிடும். முகமது அமீனின் மரணம் வெறும் விபத்து அல்ல; அது நம் கவனக்குறைவு சமூகத்திற்குத் தரும் மிகப்பெரிய பாடம்!