ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் முக்கிய விமானப்படைத் தளங்களை இந்தியா குறிவைத்ததாக முன்னாள் தலைமைத் தளபதி அனில் சௌஹான் தெரிவித்துள்ளார். முதலில் சர்கோதா விமானப்படைத் தளத்தை தாக்குவதற்கு திட்டமிடப்பட்டதாகவும், அதற்குப் பிறகு மேலும் இரண்டு இலக்குகளைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதில் ஒன்றாக கில்கித்-பால்டிஸ்தானில் உள்ள ஸ்கார்து விமானப்படைத் தளம் தேர்வு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை நிகழ்ச்சியில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியபோது அவர் வெளியிட்டுள்ளார்.
சர்கோதாவை குறிவைக்கும் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பின்னர், ஸ்கார்துவையும் தாக்குவதற்கான திட்டம் தயாராக இருந்ததாக அனில் சௌஹான் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் ஸ்கார்து பகுதியில் வானிலை மோசமடைந்ததால் திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால் இந்தியப் படைகள் தங்களது நடவடிக்கையின் திசையை மாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். மோசமான வானிலை காரணமாக திட்டமிட்ட இலக்கை நோக்கிச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதாக அவர் விளக்கியுள்ளார். இந்தத் தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | Delhi | Former CDS General Anil Chauhan says, “Once the Pakistanis had picked up the phone and said they wanted to talk at about 10 AM. The Air Chief asked me whether he should strike Sargodha, I said, Go ahead… I said, could you please identify two more targets, so… pic.twitter.com/MXOumNtb6U
— ANI (@ANI) August 25, 2026
மேலும், பாகிஸ்தானின் கிரானா மலைப் பகுதி தொடர்பாகவும் முன்னாள் சிடிஎஸ் அனில் சௌஹான் விளக்கம் அளித்துள்ளார். கிரானா ஹில்ஸ் பகுதியை இந்தியா தனியாக குறிவைத்து தாக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அந்தப் பகுதியில் பாகிஸ்தானின் அணுசக்தி வசதிகள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து பல்வேறு கேள்விகள் எழுந்திருந்தன. ஆனால் இந்திய விமானப்படை அதிகாரி ஏற்கெனவே தெரிவித்திருந்த தகவல் சரியானதே என்றும், கிரானா ஹில்ஸ் இந்தியாவின் தனிப்பட்ட தாக்குதல் இலக்காக இருக்கவில்லை என்றும் சௌஹான் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில் சர்கோதா மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள இலக்குகளை கண்காணிப்பதற்காக இந்தியா பல ஆளில்லா தாக்குதல் சாதனங்களைப் பயன்படுத்தியதாகவும் சௌஹான் தெரிவித்துள்ளார். அவை குறிப்பிட்ட காலத்துக்கு வானில் சுற்றி இலக்குகளைத் தேடும் வகையில் செயல்படும் என்று அவர் விளக்கியுள்ளார். சர்கோதாவுக்கு அருகிலேயே கிரானா ஹில்ஸ் அமைந்துள்ளதால், அந்தப் பகுதியைச் சுற்றி செயல்பட்ட சாதனங்கள் குறித்து குழப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான முன்னாள் சிடிஎஸ்ஸின் இந்தப் புதிய விளக்கங்கள் தற்போது அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளன.
