மக்களைப் பார்க்க சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு கார் வழங்கினால் நிதி நெருக்கடி என்று கூறும் அதே நபர்கள், தாங்கள் கார் ரேஸ் நடத்தும்போது மட்டும் நிதி நெருக்கடி இல்லை என்று கூறுவது ஏன்? ஒரு நாள் கார் ரேஸ் நடத்தி யாரையோ திருப்திபடுத்துவதற்காக மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்தபோது, மாநிலத்தின் நிதிநிலை குறித்தும் பொருளாதார நிலை குறித்தும் அப்போது எந்தச் சிந்தனையும் வரவில்லையா அல்லது அதுபற்றி எந்த அக்கறையும் இல்லையா?

ஆனால், மக்களின் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு என்று கார் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பிறகே, திடீரென்று மாநிலத்தின் நிதிநெருக்கடி ஆட்சியாளர்களுக்கு நினைவுக்கு வந்துள்ளதா? கார் பந்தயம் நடத்துவதற்கென்றே சென்னைக்கு அருகில் பிரத்யேகமான டிராக் ஏற்கனவே இருக்கும்போது, பொதுமக்களின் வரிப்பணத்தை வீணடித்து முக்கியமான பொதுச் சாலைகளைச் சேதமடையச் செய்து அந்தப் பந்தயத்தை நடத்தியது யாரோ சிலரைத் திருப்திப்படுத்தத்தானே தவிர வேறில்லை.

அன்றாட வாழ்வு கடுமையாகப் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பலரும் பல்வேறு இன்னல்களைச் சந்தித்த அந்தப் காலக்கட்டங்களில், உங்களது அந்த அக்கறை மற்றும் கவலை எல்லாம் எங்கே சென்றது? கார் பந்தயம் போன்ற ஆடம்பர நிகழ்ச்சிகளை நடத்தும்போது நிதிநெருக்கடி என்ற ஒன்று கண்ணுக்குத் தெரியாமல் போய்விடுகிறது, ஆனால் மக்கள் நலனுக்காக உழைக்கும் மக்கள் பிரதிநிதிகளின் தேவைகளுக்காகச் செலவு செய்யும்போது மட்டும் அது மிகப்பெரிய சுமையாகத் தெரிகிறதா?

“>

 

மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதுதான் திமுக அரசின் அப்பட்டமான இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.