சாக்லேட், கேக், இனிப்புகள் மற்றும் குளிர்பானங்களைச் சாப்பிட்டால் மட்டுமே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்று பலர் நம்புகின்றனர். ஆனால், இனிப்பு உணவுகளைத் தவிர்க்கும் நபர்களுக்கும் ரத்த சர்க்கரை அளவு உயருவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடலின் இன்சுலின் செயல்பாடு, கல்லீரலின் இயக்கம், மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் உடல் உழைப்பின்மை உள்ளிட்ட பல முக்கியக் காரணிகள் ரத்த குளுக்கோஸ் அளவைப் பாதிக்கின்றன.
உடலில் இன்சுலின் எதிர்ப்பு உருவாகும்போது செல்கள் சர்க்கரையை முறையாகப் பயன்படுத்தாமல் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது. அதேபோல, நாம் உண்ணாத நேரங்களிலும் உடலுக்கு ஆற்றல் தர கல்லீரல் தானாகவே குளுக்கோஸை உற்பத்தி செய்து ரத்தத்தில் வெளியிடுகிறது. நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு இந்தக் கட்டுப்பாட்டு முறை பாதிக்கப்படுவதால், வெறும் வயிற்றிலும் சர்க்கரை அளவு உயர்ந்து காணப்படுகிறது.
அதிக மன அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான தூக்கமின்மை காரணமாகக் கார்டிசோல் போன்ற ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கின்றன. இவை கல்லீரலை அதிக குளுக்கோஸை வெளியிடத் தூண்டுவதுடன், இன்சுலின் செயல்திறனையும் குறைக்கின்றன. மேலும், காய்ச்சல் அல்லது தொற்றுநோய்கள் உடலில் ஏற்படும்போது நோய் எதிர்ப்பு மண்டலம் வெளியிடும் ஹார்மோன்களாலும் ரத்த சர்க்கரை தற்காலிகமாக அதிகரிக்கக் கூடும்.
இனிப்பு சேர்க்கப்படாத வெள்ளை அரிசி, மைதா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகள் செரிமானத்திற்குப் பிறகு விரைவாகக் குளுக்கோஸாக மாறுகின்றன. இதனுடன் உடற்பயிற்சியின்மை மற்றும் வயிற்றுப் பகுதியில் அதிகக் கொழுப்புச் சேருவது ஆகியவை தசைகள் குளுக்கோஸைப் பயன்படுத்தும் திறனைக் குறைத்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்கின்றன.
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது, தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது, 7 முதல் 9 மணிநேரம் உறங்குவது மற்றும் மன அழுத்தத்தைக் குறைப்பது ஆகியவை சர்க்கரை அளவைச் சீராக வைக்க உதவும். இருப்பினும், அதிகத் தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை மற்றும் காரணமில்லாத உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
