சமூக வலைதளங்களின் விசித்திர உலகத்தில் எப்போது என்னென்ன விந்தைகள் அரங்கேறும் என்பதை யாராலும் யூகிக்க முடியாது. அந்த வகையில், தற்போது இணையத்தை அதிரவைத்து வரும் ஒரு சுவாரசியமான வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுவும் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள உமர்கோட் நகரில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ‘தி ஸ்கூல் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி’ பள்ளியில் ஆகஸ்ட் 14 அன்று பாகிஸ்தானின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரம்மாண்டமான கலாச்சார நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த விழாவின் ஒரு பகுதியாக, மேடையில் நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவன், பாலிவுட்டின் புகழ்பெற்ற ‘கேசரி’ திரைப்படத்தின் தேசபக்திப் பாடலான ‘தேரி மிட்டி மெயின் மில் ஜாவா’  என்ற உணர்ச்சிபூர்வமான பாடலுக்கு அட்டகாசமான நடனம் ஆடினான்.

 

இந்த வீடியோ இணையத்தில் வெளியான வேகத்தில் காட்டுத்தீ போல பரவியது. எக்ஸ் (X) தளத்தில் @choga_don என்ற பயனர் இந்த வீடியோவைப் பகிர்ந்ததைத் தொடர்ந்து, இந்திய நெட்டிசன்கள் பாகிஸ்தானை சமூக வலைதளங்களில் கலாய்த்துத் தள்ளி வருகின்றனர்.

“சொந்த நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடக் கூட பாகிஸ்தானுக்கு பாலிவுட் பாடல்கள்தான் தேவையாக இருக்கின்றன” என்று நெட்டிசன்கள் பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். அதேசமயம், அந்தச் சிறுவனின் அற்புதமான நடனத் திறமையை பலரும் பாராட்டி, அவனுக்கு முழு மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.