தன்னுடைய தாயார் மீது புகார் அளிப்பதற்காக மூன்று வயது சிறுவன் ஒருவன் நேராகக் காவல் நிலையத்திற்கே சென்று, அம்மாவை ஜெயிலில் போடுங்கள்” என்று மழலை மொழியில் கூறிய சம்பவம் காவல் அதிகாரிகளையும் நெட்டிசன்களையும் ஒரே நேரத்தில் சிரிக்கவும் வியக்கவும் வைத்துள்ளது.

மேலும் தனது அழகான குறும்புத்தனத்தால் காவல் நிலையத்தையே கலகலப்பாக்கிய இந்த சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அனைவரின் மனதையும் கொள்ளையடித்து மிக வேகமாகப் பரவி வருகிறது. அந்தச் சிறுவன் தனது தாயாரிடம் சாக்லேட் கேட்டு அடம்பிடித்ததாகவும், ஆனால் தாய் சாக்லேட் தர மறுத்து லேசாகக் கண்டித்து தட்டியதாகவும் தெரிகிறது.

தாயின் இந்தச் செய்கையால் கோபமடைந்த அந்தச் சிறுவன், நேராக அருகிலிருந்த காவல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த பெண் போலீசாரிடம் முறையிட்டுள்ளான். “என் அம்மா என் சாக்லேட்டை பிடுங்கிக் கொண்டார், என்னை அடித்துவிட்டார்; அதனால் அவரை உடனே ஜெயிலில் பிடித்துப் போடுங்கள்” என்று தனது மழலை மாறாத குரலில் அந்த சிறுவன் கூறியதைக் கேட்டு, அங்கிருந்த காவல் அதிகாரிகள் அனைவரும் தங்களின் பணிச் சுமையையும் மறந்து விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினர்.

சிறுவனின் மழலை புகாரை தீவிரமாகக் கேட்பது போல் நடித்த காவல் அதிகாரி ஒருவர், ஒரு காகிதத்தில் சிறுவனின் புகாரைப் பதிவு செய்வது போல பாவனை செய்து அவனது கோபத்தைத் தணித்துள்ளார். சிறுவனின் இந்த கள்ளமில்லா மழலைத்தனமும், அதைச் சகித்துக் கொண்டு புன்னகையுடன் கையாண்ட காவல் அதிகாரியின் அணுகுமுறையும் கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவனின் இந்த மழலை கோபமும் அழகிய குறும்புத்தனமும் சோஷியல் மீடியா பயனர்களின் இதயங்களை வென்று இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“>