ஏடிஎம் மையத்தில் இரண்டு பெண்கள் செய்த அதிர்ச்சிகரமான செயல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முதல் பார்வையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று புரியாவிட்டாலும், உற்றுப் பார்த்தால் அங்கு நடக்கும் மோசடியின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

ஏடிஎம் மையத்திற்குள் நுழையும் அந்த இரண்டு பெண்களில் ஒருவர், பணம் வெளியேறும் துளையில் ஒட்டும் பிசின் டேப்பை ஒட்டுகிறார். பின்னர் இருவருமே அங்கிருந்து அமைதியாக வெளியேறி விடுகின்றனர்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வரும் அவர்கள், டேப்பில் சிக்கி வெளியே வர முடியாமல் இருந்த வாடிக்கையாளர்களின் பணத்தை நைசாக எடுத்துக்கொண்டு தப்பிச் செல்கின்றனர். இந்த வகை மோசடி ‘ஏடிஎம் கேஷ் ட்ராப்பிங்’ என்று அழைக்கப்படுகிறது. ஏடிஎம்மில் தொழில்நுட்பக் கோளாறால் பணம் வரவில்லை என்று நினைத்து வாடிக்கையாளர் சென்றவுடன், மோசடி கும்பல் அந்தப் பணத்தை ஆட்டையைப் போட்டுவிடுகிறது.

இதுபோன்ற ஏடிஎம் பணத் திருட்டுகளில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சில விழிப்புணர்வு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். ஏடிஎம்மைப் பயன்படுத்துவதற்கு முன்பு பணம் வரும் இடத்தை நன்றாகச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டு ஏடிஎம்மில் இருந்து பணம் வரவில்லை என்றால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.

“>

 

மேலும், பணம் வரும் இடத்தில் டேப், பசையோ அல்லது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருட்களோ ஒட்டப்பட்டிருந்தால், அதை நீங்களே அகற்ற முயலாமல் உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கோ அல்லது காவல்துறையினருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும். ஏடிஎம் கார்டு பின் நம்பரை உள்ளிடும்போது கைகளால் மறைத்துக் கொள்வதும், அறிமுகம் இல்லாத நபர்களின் உதவியை நாடாமல் இருப்பதும் உங்களது கடின உழைப்பில் வந்த பணத்தைப் பாதுகாக்கும்.