தமிழகத்தில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் தகவல் முற்றிலும் உண்மையல்ல. சில வீடுகளில் வழக்கத்தை விட மின்கட்டணம் அதிகமாக வந்திருக்கலாம். ஆனால், பயன்பாடு அதிகரித்து மின்கட்டணம் கூடுவது வேறு, அரசு அதிகாரப்பூர்வமாகக் கட்டணத்தை உயர்த்துவது வேறு என்பதால் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

2026-ஆம் ஆண்டில் புதிய மின்கட்டண உயர்வு எதையும் அரசு அமல்படுத்தவில்லை. மாறாக, 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு, வழக்கமாக வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் 200 யூனிட்டுகளாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்குப் பதிலாக, அரசுக்கே ஆண்டுக்கு சுமார் ₹1,700 முதல் ₹2,000 கோடி வரை கூடுதல் மானியச் சுமை ஏற்படுகிறது.

மேலும், வழக்கமான நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய 3.5% முதல் 3.6% வரையிலான கட்டண உயர்வையும் அரசு அமல்படுத்தாமல் தவிர்த்துள்ளது. எனவே, அரசாங்கம் தரப்பில் இருந்து எந்தவிதக் கட்டண உயர்வும் செய்யப்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

அப்படியென்றால் சில வீடுகளில் பில் அதிகமாக வந்ததற்கு என்ன காரணம்? கோடைகால வெப்பம் காரணமாக ஏசி, ஃபேன், ஃபிரிட்ஜ் போன்ற மின்சாதனங்களின் பயன்பாடு இயல்பாகவே அதிகரித்திருக்கும். அதுமட்டுமின்றி, திடீரெனப் பயன்பாடு அதிகரித்ததாகப் பதிவான சுமார் 3.7 லட்சம் இணைப்புகளை மின்சார வாரியம் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இதில் ஏதேனும் தவறு இருப்பது கண்டறியப்பட்டால் அதைச் சரிசெய்யும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

“>

 

எனவே, மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுவிட்டது என்ற தவறான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். உங்களுக்கு மின்கட்டணப் ரசீதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஆன்லைன் மூலம் உங்கள் மின் பயன்பாட்டையும் கட்டணத்தையும் சரிபார்த்துக் கொள்ளலாம். ஆன்லைன் வசதி இல்லாதவர்கள், நேரடியாக அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தை அணுகி விவரங்களைப் பெற்று, தேவைப்பட்டால் மேல்முறையீடு செய்யலாம்.