இந்தியாவின் முன்னணித் தொழில்நுட்ப நகரங்களில் ஒன்றான குருகிராமில், மழைக்காலத்தில் இயல்பு வாழ்க்கை எந்த அளவுக்குப் பாதிக்கப்படுகிறதோ, அதே அளவுக்குக் கார்ப்பரேட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாக்கெட்டுகளும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

அந்த வகையில், சமீபத்தில் பெய்த பலத்த மழையின் போது, வெறும் 7 கிலோமீட்டர் தூரம் பயணிப்பதற்காக ஆன்லைன் ஆட்டோ செயலியில் கட்டணம் ₹800 எனக் காட்டியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் ஒருவர், தனது ஆதங்கத்தைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் “இது முற்றிலும் பைத்தியக்காரத்தனம்” என்று அவர் வெளியிட்ட அந்தப் பதிவு, தற்போது இணையவாசிகளிடையே மிகப்பெரிய அளவில் வைரலாகி, காரசார விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மழை பெய்யத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, குருகிராமின் முக்கியச் சாலைகளில் வெள்ள நீர் தேங்கிப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

இதைப் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் ஆன்லைன் ஆட்டோ மற்றும் கேப் சேவை நிறுவனங்கள், “சர்ஜ் பிரைசிங்” என்ற பெயரில் கட்டணத்தை வழக்கத்தை விடப் பல மடங்கு உயர்த்தி விடுகின்றன. அவசரமாக வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்ல வேண்டிய சூழலில் இருக்கும் பொதுமக்கள், வேறு வழியின்றி இதுபோன்ற அதிகப்படியான கட்டணத்தைச் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர்.

மழை பெய்தால் மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்ப உதவுவதற்குப் பதிலாக, மக்களின் நிர்க்கதியான நிலையைப் பயன்படுத்தி இப்படிப் பகல் கொள்ளை அடிப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று அந்தப் பெண் தனது பதிவில் வேதனையுடன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே, தினமும் இதுபோன்ற பிரச்சனைகளைச் சந்திக்கும் ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் தங்களது சொந்த அனுபவங்களை பகிர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

“மழை வந்தால் ஆட்டோ சேவை கிடைக்காதது ஒரு பக்கம் என்றால், கிடைத்தாலும் மாதச் சம்பளத்தில் பெரிய தொகையை இதற்கே கொடுக்க வேண்டியிருக்கிறது” என்று பலரும் கொந்தளிப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம், வெள்ளத்தில் வாகனங்களை இயக்குவதால் ஏற்படும் ஆபத்து மற்றும் பராமரிப்புச் செலவுகள் காரணமாகவே இந்தக் கட்டண உயர்வு என்றும் சில ஓட்டுநர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், மழைக்காலங்களில் பொதுமக்கள் சந்திக்கும் இந்தப் போக்குவரத்துச் சுரண்டலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டுச் சரியான தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

“>