திரைத்துறையும் கிரிக்கெட் உலகமும் இணைந்து புதிய காதல் ஜோடி ஒன்றை உருவாக்கியுள்ளதாகச் சமூக வலைதளங்களில் தற்போது ஒரு தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான மிருணாள் தாகூரும், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடித் தொடக்க வீரரான யசஸ்வி ஜெய்ஸ்வாலும் காதலிப்பதாக இணையத்தில் கிசுகிசுக்கள் எழுந்துள்ளன. மும்பையில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருவரும் அடுத்தடுத்து வெளியே வந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் பாந்த்ரா  பகுதியில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், கிரிக்கெட் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் அங்கிருந்து வெளியே செல்வதும், நடிகை மிருணாள் தாகூர் உள்ளே இருப்பதும் பதிவாகியுள்ளது. ஆனால், அந்த வீடியோவில் இருவரும் ஜோடியாகப் பேசுவதோ அல்லது ஒன்றாகச் சுற்றித் திரிவதோ போன்ற எந்தவொரு நெருக்கமான காட்சிகளும் இல்லை. இருப்பினும், ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இவர்கள் இருவரும் தற்செயலாகக் கண்ணில் பட்டதே சமூக வலைதளங்களில் பலத்த விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

இதுவரை மிருணாள் தாகூரோ அல்லது யசஸ்வி ஜெய்ஸ்வாலோ இந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை. இது காதலைத் தாண்டி ஒரு விளம்பரப் படப்பிடிப்பிற்காகவோ அல்லது தொழில்முறை சந்திப்பாகவோ கூட இருக்கலாம் என்று பல நெட்டிசன்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். மேலும், 33 வயதான மிருணாள் தாகூருக்கும், 24 வயதான யசஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் இடையே உள்ள 9 வயது வித்தியாசத்தையும் சமூக வலைதளவாசிகள் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். கடந்த காலங்களில் நடிகர் தனுஷுடன் மிருணாள் தாகூரின் பெயர் இணைக்கப்பட்டு வதந்திகள் பரவியபோது, அவர் அதனை முற்றிலுமாக மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தற்போது மிருணாள் தாகூர் இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில், யசஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியின் தவிர்க்க முடியாத தொடக்க வீரராகப் பரிமளித்து வருகிறார். இருவரும் அவரவர் துறைகளில் உச்சத்தில் இருக்கும் வேளையில், இந்தத் திடீர் காதல் வதந்திக்கு இரு தரப்பிலும் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஒரு சாதாரண சந்திப்பை வைத்துப் பயனர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வரும் இந்தத் தகவலால், பாலிவுட் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.