நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித்துறை சார்ந்த பல்வேறு முறைகேடுகளுக்கு முழுப் பொறுப்பேற்று, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று காக்ரோஜ் ஜனதா கட்சி  அமைப்பின் நிறுவனரும் தலைவருமான அபிஜித் திப்கே மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஊடகங்கள் முன்பு பேசிய அவர், நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ள ஒரு திறமையற்ற அமைச்சரைக் காப்பாற்ற பிரதமர் நரேந்திர மோடி முயன்றால், இந்த மக்கள் போராட்டம் நேரடியாகப் பிரதமரின் பதவியைப் பறிக்கும் கோரிக்கையாக மாறும் என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். அமைச்சரின் பதவி விலகல் தொடர்பான கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், இந்த இயக்கம் ஒட்டுமொத்த மத்திய அரசுக்கு எதிரான மிகப்பெரிய அரசியல் அச்சுறுத்தலாக உருவெடுக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, வரும் ஜூலை 24ஆம் தேதியன்று நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான தேச போராட்டத்திற்கு CJP அமைப்பு தற்போது அதிகாரப்பூர்வமான அழைப்பு விடுத்துள்ளது. மாணவர்களின் உரிமைகளையும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் முன்வைத்து நடத்தப்பட உள்ள இந்தப் போராட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் திரண்டு வந்து வெற்றிகரமாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கல்வித்துறையின் அவல நிலைகளுக்கும் முறைகேடுகளுக்கும் உரிய நீதி வழங்கப்பட வேண்டும் என்றும், தேர்வு முறைகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்குத் தொடர்புடைய அமைச்சர்கள் வெளிப்படையான பதிலளித்துத் தங்களது பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் போராாட்டக்காரர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு வருகின்றனர்.

தொடர்ந்து பேசிய அபிஜித் திப்கே, கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை விட ஒரு திறனற்ற அமைச்சர் ஒருபோதும் பெரிதாகிவிட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார். ஒருவேளை மத்திய அரசாங்கம் மாணவர்களின் நலன்களைப் புறந்தள்ளிவிட்டுத் தங்களது அமைச்சரைப் பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்துமானால், வரும் காலங்களில் இந்தியாவின் எந்தவொரு இளைஞரும் மாணவரும் அந்த அரசுக்குத் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய மாட்டார்கள் என்று கடுமையாகக் எச்சரித்தார்.

அரசின் நிர்வாகத் தோல்விகளையும் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் சுட்டிக்காட்டி இவர் விடுத்துள்ள இந்த அதிரடியான கருத்துக்கள் தற்போது தேசிய அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளதோடு, ஆளும் வர்க்கத்திற்கு எதிரான எதிர்ப்பலைகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.