டெல்லியின் அந்த அடுக்குமாடி குடியிருப்பில், காலை முதல் கடும் உழைப்பிற்குப் பின் களைத்துப்போய் நின்றிருந்தாள் அந்த இளம் பெண். சுமார் மூன்று மணி நேரம், ஒரு வாடிக்கையாளரின் வீட்டைத் தனது சொந்த வீட்டைப் போலவே மெருகேற்றிக் கொண்டிருந்தவள், வேலையை முடித்ததும் அந்தச் சிறு கோரிக்கையை முன்வைக்கிறாள்: “கொஞ்சம் வாஷ்ரூம் பயன்படுத்தலாமா?” ஆனால், அங்கு கிடைத்த பதில் அவளை நிலைகுலைய வைத்தது.

“அதற்குப் பின்னால் இருக்கும் செக்யூரிட்டி அறையில் உள்ள கழிப்பறையைப் பயன்படுத்துங்கள்” என்று அந்த வாடிக்கையாளர் முகத்திற்கு நேராகச் சொல்ல, அந்தப் பெண்ணின் சுயமரியாதை சிதைந்து போனது. வேலையை முடித்துக் கொடுத்த கைகளுக்குப் பாராட்டுக்கு பதிலாக, ஒரு நட்சத்திர மதிப்பீடு தண்டனையாகக் கிடைத்தது.

இந்த ஒரே ஒரு மதிப்பீடு அவளது ஐந்து நாள் வாழ்வாதாரத்தைப் பறித்து, வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி முடக்கிப் போட்டிருக்கிறது.

இந்தச் சம்பவம், ‘ஜிக்’ பொருளாதாரம் என்று அழைக்கப்படும் நவீன உலகில் நாம் மனிதநேயத்தை எந்த அளவுக்கு இழந்திருக்கிறோம் என்பதற்கான சாட்சி. ஒரு சேவையைப் பெறுவதற்காகப் பணம் கொடுத்தால், அந்த மனிதரைத் தங்களின் ஏவல் ஆளாகக் கருதும் மனநிலை இன்னும் மாறவில்லை. சுகாதாரக் காரணம் என்று சொல்லும் சிலர், அதை நாகரிகமான முறையில் கையாளத் தவறிவிடுகின்றனர்.

ஆனால், ஆறு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கானவீடுகளுக்குச் சென்று உழைக்கும் அந்தத் தொழிலாளியின் கேள்வி நியாயமானதுதான்: “எங்கள் உழைப்பைத் தேவைப்படுபவர்கள், எங்கள் இயற்கை உபாதைகளைக் கவனிப்பதில் ஏன் இவ்வளவு அலட்சியம் காட்டுகிறார்கள்?” பணம் கொடுத்தால் அந்த மனிதரின் தாகத்தையும், அடிப்படைத் தேவைகளையும் மதிக்கத் தேவையில்லை என்று அர்த்தமல்ல.

“>

 

வசதிகள் மாறலாம், ஆனால் மனித நேயம் மாறக்கூடாது. ஒரு வாடிக்கையாளரின் ஒரு நட்சத்திர மதிப்பீடு, ஒரு தொழிலாளியின் பசியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதுதான் இந்த நவீன உலகின் மிகப்பெரிய துயரம். அந்தப்பெண்ணின் கண்ணீருக்குப் பின்னால், உழைக்கும் ஒவ்வொரு தொழிலாளியின் வலியும் மறைந்திருக்கிறது.