உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள மௌதாஹா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு அதிர்ச்சியூட்டும் நகை திருட்டுச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

அங்குள்ள ஒரு பிரபல நகைக்கடைக்கு, பெண் ஒருவரும் அவருடன் ஒரு சிறுமியும் நகை வாங்குவது போல பாசாங்கு செய்து கொண்டு வந்துள்ளனர்.

கடையில் இருந்த நகைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்பது போல நடித்துக் கொண்டே, அந்தப் பெண் அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 500 கிராம் எடையுள்ள வெள்ளி கொலுசை  மிக சாதுரியமாகத் தனது கைப்பைக்குள்  முதலில் மறைத்து வைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அந்த நகைக் கடைக்காரர் மற்றொரு நகையை எடுப்பதற்காகக் கடையின் உள்பகுதிக்குச் சென்ற சமயம் பார்த்து, கைப்பைக்குள் இருந்த 500 கிராம் வெள்ளி கொலுசைத் தனது பிளவுஸிற்குள்  மிக வேகமாக மறைத்து வைத்துள்ளார்.

கடைக்காரர் மீண்டும் வெளியே வருவதற்குள் எவ்வித சலனமும் இன்றி, நகைகள் எதுவும் பிடிக்காதது போல் காட்டிவிட்டு அந்தப் பெண் அங்கிருந்து சிறுமியுடன் நைசாக நழுவியுள்ளார்.

பின்னர் நகைகள் மாயமாகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி  கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோதுதான் அந்தப் பெண்ணின் பலே திருட்டு யுத்தி அம்பலமானது.

இந்த நூதன திருட்டு குறித்த முழுமையான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதுடன், போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.