பாகிஸ்தானின் லாகூர் நகருக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் (@arthurtravelsss) என்ற சுற்றுலாப் பயணி, அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பாத்ஷாஹி மசூதி’க்குள் நுழைந்தபோது, அது தனக்குத் தாஜ்மஹாலை நினைவூட்டுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், “இது தாஜ்மஹால் அல்ல, ஆனால் கிட்டத்தட்ட அதைப் போன்றே இருக்கிறது; இத்தகையதொரு காட்சியை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை” என்று கூறி, இந்த மசூதி தாஜ்மஹாலை விடச் சிறந்தது என்ற விவாதத்தை இணையத்தில் கிளப்பியுள்ளார்.
இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், இதுவரை 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் இதைப் பார்வையிட்டுள்ளனர். முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பால் கி.பி. 1673-இல் கட்டப்பட்ட இந்த பாத்ஷாஹி மசூதி, ஒரே நேரத்தில் 55,000 பேர் தொழுகை நடத்தும் அளவுக்குப் பிரம்மாண்டமானதாகும். இதற்கு நேர்மாறாக, உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான இந்தியாவின் தாஜ்மஹால், முகலாயப் பேரரசர் ஷாஜகானால் தனது மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டப்பட்டு கி.பி. 1653-இல் முழுமையடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கச் சுற்றுலாப் பயணியின் இந்த ஒப்பீட்டு வீடியோ, சமூக வலைதளங்களின் கமெண்ட் பகுதியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் நெட்டிசன்களிடையே கடுமையான விவாதத்தை உருவாக்கியுள்ளது. ஒரு பயனர், “அப்படியானால் தாஜ்மஹால் ஏன் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது என்று யோசித்தீர்களா? எதையும் எதனுடனும் ஒப்பிடாதீர்கள், ஒவ்வொரு பொருளும் தனித்துவமான அழகுடையது, நீங்கள் செய்வது தவறு” என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “பாத்ஷாஹி மசூதி மிகவும் அழகானதுதான், ஆனால் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பல்வேறு வகையான கற்களைக் கொண்டு தனித்துவமாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் தாஜ்மகாலே உலகின் மிக அழகிய பாரம்பரியக் கட்டடமாகும்” என்று அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் அப்துல் ரசூல் என்பவரால் தாஜ்மகாலின் போலி வடிவம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்தாலும், லாகூர் பாத்ஷாஹி மசூதியுடன் தாஜ்மகாலை ஒப்பிட்டு வெளிநாட்டுப் பயணி பேசியதே இந்த இணையப் போருக்கு முதன்மைக் காரணமாக அமைந்துள்ளது.
