ஐபிஎல் 2026 தொடரின் முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டி தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் ஆடிய அசாத்தியமான அதிரடி ஆட்டம், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, போட்டியின் 17-ஆவது ஓவரில் குஜராத்  அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவின் பந்துவீச்சில் ரஜத் படிதார் அடுத்தடுத்து அசுர சிக்சர்களைப் பறக்கவிட்டுத் தனது அரைசதத்தைக் கடந்தார். அப்போது டக்-அவுட்டில் அமர்ந்திருந்த நட்சத்திர வீரர் விராட் கோலி, அந்த சிக்சரின் பிரம்மாண்டத்தைக் கண்டு வியப்படைந்து, தனது கைகளால் வாயை மூடியபடி அதிர்ச்சியை வெளிப்படுத்திய நேரடி ஒளிபரப்புக் காட்சிகள் தற்பொழுது சமூக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

இப்போட்டியில் இறுதிவரை அதிரடி காட்டிய கேப்டன் ரஜத் படிதார், வெறும் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 9 அசுர சிக்சர்களுடன் 280-க்கும் அதிகமான ஸ்ட்ரைக் ரேட்டில் 93 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது இந்த அதிரடியால் ஆர்சிபி அணி 200 ரன்களைக் கடந்ததோடு, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 255 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே பிளே-ஆஃப் சுற்றில் ஒரு அணி பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோர் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை பெங்களூரு அணி படைத்துள்ளது. “சிறந்த வீரரையே வியக்க வைத்த பேட்டிங்” என்ற தலைப்புடன் ஐபிஎல் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் இந்த போட்டியில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.