தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இந்தியாவைக் கடந்து அண்டை நாடான பாகிஸ்தானிலும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. பாகிஸ்தானின் பிரபல பத்திரிகையாளர் ரவூப் கலாஸ்ரா, நடிகர் விஜய்யின் இந்த அரசியல் வெற்றியை “மிகவும் பிரம்மாண்டமானது” என்று பாராட்டியுள்ளார். கட்சி தொடங்கி வெறும் இரண்டே ஆண்டுகளில், நீண்ட கால அனுபவம் கொண்ட அரசியல் தலைவர்களை வீழ்த்தி 108 இடங்களைக் கைப்பற்றியது சாதாரண சாதனையல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமிதாப் பச்சனின் திரைப் பெயரான ‘விஜய்’ என்ற பெயருக்கும், தமிழக மக்களின் மனங்களை வென்ற இந்த ‘விஜய்’-க்கும் இடையே உள்ள பொருத்தத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

​பாகிஸ்தானின் ‘நியோ டிவி’ (Neo TV) விவாதத்தில் பேசிய ரவூப், 60-க்கும் மேற்பட்ட பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்த ஒரு உச்ச நட்சத்திரம், தனது புகழின் உச்சியில் இருக்கும்போதே அரசியலுக்கு வந்ததை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். குறிப்பாக, வாரிசு அரசியல் வலுவாக இருக்கும் தமிழகத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலினை அவரது சொந்தத் தொகுதியான கொளத்தூரிலேயே விஜய்யின் கட்சி வேட்பாளர் தோற்கடித்தது உலக அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 234 தொகுதிகளில் 108-ஐ வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள விஜய், விரைவில் தமிழகத்தின் முதல்வராகப் பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு பாகிஸ்தான் ஊடகங்களிலும் எதிரொலித்து வருகிறது.