மும்பை ஜோகேஸ்வரி பகுதியைச் சேர்ந்த 33 வயது கார் டீலர் ஒருவர், தனது பிறந்தநாளை வித்தியாசமாகத் தனது சமூக வலைதளங்களில் கொண்டாட நினைத்து ஒரு ஆபத்தான காரியத்தில் ஈடுபட்டுள்ளார். கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ சாலை ஓரம் தனது காரை நிறுத்திய அவர், சாலையிலேயே தீப்பற்றும் திரவத்தை ஊற்றி ’33’ என்ற எண்ணை வடித்துள்ளார்.

பின்னர் தீக்குச்சியைப் பற்றவைத்து சாலையில் நெருப்பு எரியவிட்டு, அதன் முன்னே நின்று சிகரெட் பிடிப்பது போலவும், தீயில் நடந்து செல்வது போலவும் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகவே, “வயது 33 ஆனால் அறிவு மட்டும் 13 தான்” என நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

 

சாலையில் 4 இடங்களில் தீயினால் பாதிப்பு ஏற்பட்டதோடு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் இது பெரும் ஆபத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ ஆதாரத்தை வைத்து கோரேகான் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த நபரை அதிரடியாகக் கைது செய்தனர்.

“சமூக வலைதளப் புகழுக்காகப் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என போலீசார் எச்சரித்துள்ளனர்.