இந்தியத் திருமணங்கள் என்றாலே ஆடம்பரம், அதிரடி அலங்காரங்கள் மற்றும் அறுசுவை உணவுகளுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், இப்போது திருமணத்தை வித்தியாசமாகக் காட்டுகிறேன் என்ற பெயரில் மக்கள் செய்யும் புதுமைகள் சில நேரங்களில் விவாதத்திற்கு உள்ளாகின்றன.

தற்போது வைரலாகி வரும் வீடியோவில், ஒரு திருமண விழாவில் சீருடை அணிந்த பெண்கள் கையில் தின்பண்டங்கள் அடங்கிய தட்டுகளை ஏந்தியபடி, கால்களில் ‘ஹோவர்போர்டு’ எனப்படும் தானியங்கி சக்கரங்களைப் பொருத்திக்கொண்டு விருந்தினர்களுக்கு இடையே மிக லாவகமாகச் சுற்றி வந்து உணவு பரிமாறுகின்றனர்.

 

இந்த ‘ஹை-டெக்’ பரிமாறல் முறையைக் கண்ட சில விருந்தினர்கள் ஆச்சரியமடைந்தாலும், சமூக வலைதளங்களில் இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “பணம் இருக்கிறது என்பதற்காக இப்படியெல்லாம் தேவையற்ற ஆடம்பரம் செய்ய வேண்டுமா?” என்றும், “உணவு பரிமாறும் போது நிலைதடுமாறி விழுந்தால் என்னாவது?” என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நவீனத்துவம் என்ற பெயரில் எளிமையை மறந்து, பகட்டுக்காக இதுபோன்ற ஆபத்தான மற்றும் தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாகப் பலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.