உத்தரப்பிரதேச மாநிலம் பிரோசாபாத் அருகே உள்ள டூண்ட்லா இரயில் நிலையத்தில் மனிதநேயமற்ற ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரீதம் திர்வா (55) என்ற முதியவர், தனது மனைவியுடன் டெல்லியிலிருந்து நியூ ஜல்பைகுரிக்கு பிரம்மபுத்ரா மெயில் இரயிலில் பயணம் செய்துள்ளார். இரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவரது மனைவி ஏசி கோச்சிலும், பிரீதம் பொதுப் பெட்டியிலும் ஏறியுள்ளனர்.

இரயில் டூண்ட்லா நிலையத்தில் நின்றபோது, தனது மனைவியைப் பார்ப்பதற்காக ஏசி கோச் நோக்கி பிளாட்பாரத்தில் ஓடி வந்த பிரீதமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார்.

பிளாட்பாரத்தில் அவர் அசைவற்றுக் கிடந்ததைக் கண்டும், அங்கு நின்ற பயணிகள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. சிறிது நேரத்தில் இரயில் நகரத் தொடங்கியபோது, பிளாட்பார ஓரத்தில் கிடந்த பிரீதமின் உடல் இரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையிலான இடைவெளியில் சிக்கிக் கொண்டது. நகர்ந்த இரயில் அவரை இழுத்துச் சென்றதில் உடல் நசுங்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

காவல்துறையினர் இரயிலை நிறுத்த முயன்றபோதும் அதற்குள் உயிர் பிரிந்துவிட்டது. “ஆரம்பத்திலேயே யாராவது அவரைத் தூக்கி ஓரமான இடத்தில் அமரவைத்திருந்தால் ஒரு உயிரைக் காப்பாற்றியிருக்கலாம்” என சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர். இந்தச் சம்பவம் இரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் மனிதநேயம் குறித்த பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.