சமீபகாலமாக உடற்பயிற்சி கூடங்களில் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போதே திடீர் மரணங்கள் ஏற்படுவது அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வரிசையில், தற்போது ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள பட்காம் பகுதியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஜிம் ஒன்றில் இளைஞர் ஒருவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.

வொர்க்-அவுட் இடைவேளையின் போது அவர் ஒரு இடத்தில் அமர்ந்திருந்தபோது, திடீரென நிலைகுலைந்து தரையில் விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்க முயன்றும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இந்த முழுச் சம்பவமும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அளவுக்கு அதிகமான உடற்பயிற்சி அல்லது இதய பாதிப்புகள் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

ஆரோக்கியத்திற்காகச் செல்லும் ஜிம்மில் இத்தகைய மரணங்கள் நிகழ்வது தொடர்கதையாகி வருவது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.