பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL 2026) கிரிக்கெட் போட்டிகள் ஒருபுறம் விறுவிறுப்பாக நடந்தாலும், மறுபுறம் இளம் வீரர் நசீம் ஷாவைச் சுற்றியுள்ள மர்மமான சர்ச்சைகள் அந்நாட்டையே அதிர வைத்துள்ளது. பஞ்சாப் மாநில முதலமைச்சர் மரியம் நவாஸ் குறித்து நசீம் ஷாவின் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியான ஒரு பதிவுதான் இந்த மொத்த களேபரத்திற்கும் காரணம்.

அந்தப் பதிவு சில நிமிடங்களிலேயே டெலீட் செய்யப்பட்டாலும், “எனது பக்கம் ஹேக் செய்யப்பட்டுவிட்டது” என அவர் விளக்கம் அளித்தாலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) அவருக்கு ‘ஷோகாஸ்’ நோட்டீஸ் அனுப்பி கடும் நெருக்கடி கொடுத்துள்ளது. ​நிலைமை இப்படி இருக்க, நசீம் ஷா அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் வதந்திகள் பரவி வருகின்றன. இதற்கு அதிகாரப்பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

களத்தில் ராவல்பிண்டி பிண்டிஸ் அணிக்காக விளையாடி வரும் நசீம் ஷா, இந்த மன உளைச்சலால் விக்கெட் எதுவும் எடுக்க முடியாமல் திணறி வருகிறார். வரும் ஏப்ரல் 2-ம் தேதி கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பாரா அல்லது இந்த அரசியல் சர்ச்சை அவரது கரியரையே காலி செய்யுமா என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.