கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் மூதாட்டி ஒருவரிடம் ஏழு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்த வழக்கில் பாகுலேயன் என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருந்த இவரை நெய்யாற்றின்கரை பகுதியில் வைத்து மடக்கிப் பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது மனைவிகளைத் திருப்திப்படுத்தவும் அவர்களுக்குப் புதிய நகைகளை அணிவித்து அழகு பார்க்கவுமே தான் இத்தகைய திருட்டு மற்றும் வழிப்பறிச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது பாகுலேயன் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை மொத்தம் 22 பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்தது அம்பலமானது. கணவனை இழந்தவர்கள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களைக் குறிவைத்துத் தனது பெயரை மாற்றி மாற்றிச் சொல்லி அவர் இந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.
தாஸ், பாபு, ராஜன், கல்யாணராமன் எனப் பல பெயர்களில் உலா வந்த இவர் மீது கேரளா முழுவதும் ஐம்பதிற்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்துப் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். 22 மனைவிகளுக்காகத் திருட்டில் ஈடுபட்ட இந்த நபரால் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
